
நாலுகாசு இருந்துவிட்டால் போதும்! ஒரு சிலர் போடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல! ஆனால், பாக்தாத்தில் நடந்த சம்பவம் ஒன்றைக் கேளுங்கள். ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. அவ்வூர் செல்வச்செழிப்பு மிக்கது. எல்லாருமே மாடமாளிகைகளில் வசித்தனர். பொன்னும், மணியும் கொட்டிக்கிடந்தது. அந்த ஆடம்பர நகரம் தன்வசம் இருந்தால், நினைத்ததையெல்லாம் சாதிக்கலாமே என ரோம் மன்னர் நினைத்தார். தன் தூதன் ஒருவனை அனுப்பி, பாக்தாத் நகரம் பற்றிய விபரங்களை அறிந்து வரச்சொன்னார்.பாக்தாத் சென்ற தூதன், அந்நகரின் செல்வச்செழிப்பைப் பார்த்து அசந்து விட்டான். அரண்மனை போன்ற வீடுகளே எங்கும் தென்பட்டன. மக்கள் வசிக்கும் வீடுகளே இப்படி இருந்தால், மன்னரின் மாளிகை எந்தளவுக்கு இருக்கும் என்பதை அவனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. மாளிகையைத் தேடித்தேடி அலைந்து சோர்ந்து விட்டான். கடைசியாக அவ்வூர்வாசி ஒருவரிடம், ""நண்பரே! மன்னரின் மாளிகை எங்கிருக்கிறது?'' என்றான். அவர் சிரித்தபடியே, ""நன்றாக கேட்டீர்கள்! மன்னர் இல்லத்தின் முன்னால் நின்று கொண்டே, அதைத் தேடினால் எப்படி கண்டுபிடிக்க முடியும்? இதோ! இதுதான் மன்னர் மாளிகை,'' என்று இருப்பதிலேயே சிறிய மாளிகை ஒன்றை சுட்டிக்காட்டினார்.
""ஐயா! நான் வெளியூரில் இருந்து வருகிறேன். அதனால், எனக்குத் தெரியவில்லை. அது சரி...மக்கள் வசிக்கும் வீடுகளை விட மன்னரின் வீடு மிகச்சிறிதாக உள்ளது. இதில், அவர் தன் ராணிகளுடனும், வீரர்களுடனும் எப்படி வசிக்கிறார்?'' என்றான்.
""நண்பரே! தாங்கள் அந்த மரத்தடியைப் பாருங்கள். அதன் கீழே ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கிறாரே! அவர் தான் எங்கள் மன்னர்,'' என்று சொல்லிவிட்டு போய் விட்டார். தூதன் நாடு திரும்பினான். ரோம் மன்னர் அவனிடம் ஆவலுடன் விசாரித்தார்.
""தூதனே! எப்படி? நமக்கு வெற்றி கிடைத்து விடுமல்லவா?'' என்றதும்,
""மாமன்னரே! மக்களின் மதிப்பைப் பெற்றவரும், எளிமையே வடிவமுமானவர்களை எவ்வளவு பெரிய சக்தியாலும் வெல்ல முடியாது. பாக்தாத் மீதான போர் எண்ணத்தை தவிர்த்து விடுங்கள்,'' என்றான். எளிமையை வெல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்டு ஆட்சியாளர்கள் நடந்து கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.
""ஏழையாகவே நீர் இறைவனைச் சந்திக்க வேண்டும். செல்வந்தனாக சந்திக்காதீர்!'' என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.
No comments:
Post a Comment